திருவாலங்காடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • திருச்சிற்றம்பலம்
    நான்காம் திருமுறை
    திருவாலங்காடு
    பாடல் எண் : 1
    வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
    உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
    கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
    அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய் , விரும்புபவர்களுக்கு எளியவராய் , உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய் , நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார் .
    பாடல் எண் : 2
    செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும்
    வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்
    மந்தமாம் பொழிற்ப ழனை மல்கிய வள்ளல் போலும்
    அந்தமி லடிகள் போலு மாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய் , கோபம் உடைய காளையை உடையவராய் , வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய் , தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதி யில்லாத பெருமானாய் உள்ளார் .
    பாடல் எண் : 3
    கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்
    எண்ணிலார் புரங்கண் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்
    பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய
    அண்ணலா ரெம்மை யாளு மாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும் , பகைவருடைய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும் , பண்ணுக்கு ஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும் , சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார் .
    பாடல் எண் : 4
    காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும்
    தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலும்
    கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய
    ஆறிடு சடையர் போலு மாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த , கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார் .
    பாடல் எண் : 5
    பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலும்
    கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை யறிவர் போலும்
    பேர்த்துமோ ராவ நாழி யம்பொடுங் கொடுப்பர் போலும்
    தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.
    பொழிப்புரை :
    பழையனூரையடுத்த , பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய் , கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார் .
    பாடல் எண் : 6
    வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலும்
    காட்டினின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலுங்
    பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்
    ஆட்டினா ரரவந் தன்னை யாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய் , முழாவின் ஒலி நீங்காததும் , பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார் .
    பாடல் எண் : 7
    தாளுடைச் செங் கமலத் தடங்கொள்சே வடியர் போலும்
    நாளுடைக் காலன் வீழ வுதைசெய்த நம்பர் போலும்
    கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய
    ஆளுடை யண்ணல் போலு மாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங் கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய் , தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த , நம்மால் விரும்பப்படும் தலைவராய் , யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார் .
    .
    பாடல் எண் : 8
    கூடினா ருமை தனோடே குறிப்புடை வேடங் கொண்டு
    சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
    பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
    ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே.
    பாடல் எண் : 9
    வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும்
    ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை யுகப்பர் போலும்
    பெற்றமே யுகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்
    அற்றங்க ளறிவர் போலு மாலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய் , விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞான முடையவராய் உள்ளார் .
    பாடல் எண் : 10
    மத்தனாய் மலையெ டுத்த வரக்கனைக் கரத்தோ டொல்க
    ஒத்தினார் திருவி ரலா லூன்றியிட் டருள்வர் போலும்
    பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய
    அத்தனார் நம்மை யாள்வா ராலங்காட் டடிக ளாரே.
    பொழிப்புரை :
    ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய் , பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய் , பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார் .
    அப்பர் பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி !!
    www.thevaaram.org

ความคิดเห็น • 1

  • @annapooranik1967
    @annapooranik1967 2 ปีที่แล้ว

    அருமை ஐயா அருமை